கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன விடயத்திற்கான பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன, அமெரிக்க துணைத் தூதரகத் தலைவர் டக்ளஸ் சோனெக்கை Douglas Sonnek (செயற்பணியின் பிரதித் தலைவர்) இன்று (21) கொவிஜன மந்திரவில் சந்தித்தார்.
இருதரப்பு விவசாய ஒத்துழைப்பு தொடர்பான பல பிரச்சினைகள் இங்கு கலந்துரையாடப்பட்டன. எமது நாடு எதிர்கொண்ட கடினமான சூழ்நிலைகளில் இலங்கைக்கு விஷேட பங்களிப்பை வழங்க அமெரிக்க அரசாங்கம் விருப்பம் தெரிவித்ததற்காக பிரதி அமைச்சர் அமெரிக்க துணைத் தூதுவருக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.
இலங்கையின் மிகப்பெரிய கமக்காரர் அமைப்புக்கு வழிகாட்டலை வழங்கி, விவசாயிகளுடன் தொடர்ந்து தொடர்பு கொள்வதன் மூலம் அவர்களின் உள்ளத்திலிருக்கும் கவலைகளை இனங்காண முடிந்துள்ளதாகவும், இதனால் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றிய புரிந்துணர்வு தனக்கு இருப்பதாகவும் பிரதி அமைச்சர் இதன் போது கூறினார்.
தற்போதைய அரசாங்கம் இலஞ்சத்தையும் மற்றும் ஊழலையும் ஒழிப்பதன் மூலம் ஒரு புதிய பாதையில் இறங்கியுள்ளதால், அமெரிக்க அரசாங்கத்துடன் மிகவும் நம்பகமான முறையில் பணியாற்ற முடியும் என பிரதி அமைச்சர் வலியுறுத்தினார். முதலாவது வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்த பிரதி அமைச்சர், இலங்கை புதிய நிதி முகாமைத்துவத்தை நோக்கி நகர்ந்துள்ளதால், இலங்கையின் பங்குச் சந்தை, சுற்றுலா வருமானம் மற்றும் வெளிநாட்டு பணம் அனுப்புதல் என்பன அதிகரித்துள்ளதாக அமெரிக்க துணைத் தூதரிடம் தெரிவித்தார்.
2023 சிறுபோகத்திற்கு உரம் வழங்குவதில் தொடங்கி இலங்கையில் நடைபெற்று வரும் கருத் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து மகிழ்ச்சியடைவதாகவும், பாடசாலை மாணவர்களுக்கான உணவு மற்றும் ஊட்டச்சத்தை மேம்படுத்தும் நிகழ்சிச் திட்டம், பால் விவசாயிகளின் உற்பத்தித்திறனை அதிகரிக்கும் நிகழ்ச்சித் திட்டம் மற்றும் தென்னை விளைச்சல் போன்ற அமெரிக்க உதவியின் கீழ் செயற்படுத்தப்படும் நிகழ்ச்சித் திட்டங்கள் எதிர்காலத்தில் தொடர்ந்து செயற்படுத்தப்படும் என இதன் போது அமெரிக்க துணைத் தூதுவர் தெரிவித்தார்.
தனது கருத்துக்களை வெளிப்படுத்திய அமெரிக்க துணைத் தூதுவர், இலங்கையில் தென்னை விளைச்சலையும் மற்றும் பால் விவசாயிகளின் உற்பத்தித்திறனையும் அதிகரிப்பதில் அமெரிக்க அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது என கூறினார்.
தற்போதைய கருத் திட்டங்களை சரியான நேரத்தில் செயற்படுத்துவதற்குத் தேவையான சூழலை அவசரமாக உருவாக்குமாறு துணைத் தூதுவர் கமத்தொழில் அமைச்சிடம் ஒரு விஷேட கோரிக்கையை விடுத்தார்.
அமெரிக்க துணைத் தூதுவருடன் நடைபெற்ற சந்திப்பில் கமத்தொழில் அமைச்சின் மேலதிக செயலாளர் (விவசாய தொழில் நுட்பம்) கலாநிதி டபிள்யூ.ஏ.ஆர்.ரீ. விக்ரமஆராச்சி கலந்து கொண்டபோது, விவசாய ஆராய்ச்சி, விவசாயப் பொருட்களின் இறக்குமதி மற்றும் விவசாய நவீனமயமாக்கல் போன்ற துறைகளில் அமெரிக்க அரசாங்கத்திடமிருந்து இலங்கை ஆதரவை எதிர்பார்ப்பதாக கூறினார்.
உத்தியோகத்தர்களுக்கு பயிற்சி அளிப்பதை விட விவசாயிகளுக்கு பயிற்சி அளிப்பது புதிய அரசாங்கத்தின் முக்கிய குறிக்கோளாகும் என இதன் போது திரு. விக்கிரமாராச்சி கூறினார்.
புதிய அமெரிக்க வரிக் கொள்கையின் கீழ் விவசாய உள்ளீடுகள், விதைகள் மற்றும் நவீன விவசாய தொழில் நுட்பம் என்பவற்றை இறக்குமதி செய்யும் போது இலங்கைக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன வினவினார். இதற்கு பதிலளித்த துணைத் தூதுவர், இறக்குமதிகள் மீது அமெரிக்க அரசாங்கம் விதிக்கும் வரிகள் தொடர்பாக இலங்கைக்கு சில நிவாரணங்களை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்படும் என கூறினார். இலங்கைக்கு நவீன தொழில் நுட்பத்தையும் மற்றும் விவசாய மேம்பாட்டிற்கு தேவையான அனைத்து ஆதரவையும் வழங்க அமெரிக்க அரசாங்கம் தொடர்ந்து உறுதிபூண்டுள்ளதாகவும், இரு நாடுகளுக்கும் இடையே தற்போதுள்ள இராஜதந்திர உறவுகளை வளர்ப்பதன் மூலம் அமெரிக்காவும் இலங்கையும் எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பைத் தொடர்ந்து பேணும் எனவும் துணைத் தூதுவர் மேலும் தெரிவித்தார்.