ஆறு பிரதான விவசாயப் பிரதேசங்களில் இருந்து நாட்டுக்குத் தேவையான மொத்த அரிசியை உற்பத்தி செய்யும் ஒரு வேலைத் திட்டத்தை ஆரம்பிக்க கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு திட்டமிட்டுள்ளது.
இந்த வேலைத் திட்டம் 2024 ஆம் ஆண்டு முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. அதன்படி தற்போது நாட்டிற்கு அதிகளவு நெல்லை உற்பத்தி செய்து வழங்கும் அனுராதபுரம், அம்பாந்தோட்டை, பொலன்னறுவை, கண்டி, அம்பாறை, மொனராகலை ஆகிய விவசாயப் பிரதேசங்களின் நெல் வயல்களின் அடிப்படையில் அதிக விளைச்சலைப் பெறும் வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
பயிர்ச்செய்கைப் போகங்களில் நெல்லின் உற்பத்தியை இரட்டிப்பாக்குவது இந்த வேலைத் திட்டத்தின் நோக்கமாகும்.
தற்போது எமது நாட்டின் வருடாந்த நுகர்வுக்கு தேவையான அரிசியின் அளவு 2.4 மில்லியன் மெற்றிக் டொன்களாகும். 2024 ஆம் ஆண்டில் மொத்த தேசிய அரிசியின் தேவை 4.1 மில்லியன் மெற்றிக் டொன்களாகும். 2023 ஆம் ஆண்டில் 4.5 மில்லியன் மெற்றிக் டொன் நெல்லை உற்பத்தி செய்ய முடிந்துள்ளது. அதன்படி, எமது நாட்டின் அரிசிக்கான தேசிய தேவையை விடவும் நெல் உற்பத்தி அதிகமாக உள்ளது.
நெல் விளைச்சலில் அதிக உற்பத்தி திறன் வாய்ந்த மேற்குறித்த அதிகாரப் பிரதேசங்களில் ஹெக்டேருக்கு விளைச்சலை 3.5 மெற்றிக் டொன் முதல் 07 மெற்றிக் டொன் வரை அதிகரிப்பதே இந்த வேலைத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். தற்போது, வளவை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களில் குறிப்பிட்ட வயல்களில் இருந்து ஹெக்டேருக்கு 11 மெற்றிக் டொன் போன்ற அதிக விளைச்சலை பெற முடிந்துள்ளது.
இந்த இலக்கை அடைந்து கொள்ளும் பொருட்டு விவசாயிகளுக்கு ஒரு தொழில் நுட்ப பொதியை அறிமுகப்படுத்த விவசாய திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, தட்டுக் கலப்பைகளின் பாவனையை பிரபல்லியப்படுத்தல், லேசர் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி வயல்களை மட்டப்படுத்தல் மற்றும் சிறிய வயல் கீத்துக்களை இணைத்து பெரிய வயல் கீத்துக்களாக உருவாக்குதல், பரசூட்டுத் தட்டுக்களை பயன்படுத்தி பயிர்களை தாபித்தல், ஒரேமாதிரியான ஈர மற்றும் உலர் நீர்ப்பாசன முறைமைகளை அறிமுகப்படுத்துதல், மண் போஷனை முகாமைத்துவம், உயிரியல் உரம் தயாரித்தல் என்பன இந்த தொழில் நுட்பப் பொதியில் உள்ளடங்குகின்றன.
தற்போது எமது நாட்டில் உள்ள பெரும்பாலான நெல் வயல்களில் விளைச்சல் ஹெக்டேருக்கு 1 மெ.டொ. முதல் 2.5 மெ.டொ. வரை குறைவாக காணப்படுகின்றது. இந்த விளைச்சல் விவசாயிகளின் உற்பத்தி செலவை ஈடுசெய்ய போதுமானதாக இல்லை. எனவே ஒரு ஹெக்டேயரில் அதிக விளைச்சலை பெறக் கூடிய தொழில் நுட்ப முறையை அறிமுகப்படுத்துமாறு கமத்தொழில் மற்றும் தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர விவசாய திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கினார்.
மேலும், முதன்முறையாக 2024 ஆம் ஆண்டு பெரும்போகப் பயிர்ச் செய்கையில் இருந்து நாட்டிலுள்ள அனைத்து நெல் விவசாயிகளுக்கும் தாவரம் பூக்கும் நிலையில் இடப்படும் 55,000 மெற்றிக் டொன் உரத்தை இலவசமாக விநியோகிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த உரத்தை இலங்கைக்கு இலவசமாக வழங்க உலக உணவு நிகழ்ச்சித் திட்டம் உடன்பட்டுள்ளது.