இலங்கையில் தேயிலை ஏற்றுமதி மூலம் இந்த வருடம் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்ட முடியும் என இலங்கை தேயிலை ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.
கடந்த இரண்டு வருடங்களில் இந்த நாட்டின் தேயிலை கைத்தொழில் 1 முதல் 1.2 பில்லியன் அமெரிக்க டொலர் வரையிலான அந்நியச் செலாவணியை ஈட்டித் தந்துள்ளது.
தலவாக்கலை புனித கூம்ப்ஸ் தேயிலை தொழிற்சாலை மற்றும் இலங்கை தேயிலை ஆராய்ச்சி நிறுவகம் ஆகியவற்றின் முன்னேற்றம் தொடர்பாக கமத்தொழில் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் திரு. மகிந்த அமரவீர கடந்த ஞாயிற்றுக்கிழமை (07) ஒரு மீளாய்வு கூட்டத்தை நடத்தினார்.
2021 ஆம் ஆண்டு இரசாயன உரங்கள் மீது விதிக்கப்பட்ட தடை இலங்கையில் தேயிலை பயிர்ச்செய்கையையும் பாதித்திருந்தது. இதன் காரணமாக 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் தேயிலை பயிர்ச்செய்கைக்கான உரங்களின் பயன்பாடு குறைந்துள்ளது. இதனால் தேயிலை பயிர்ச்செய்கையில் விளைச்சல் ஓரளவு குறைந்துள்ளது.
ஆனால் இந்த ஆண்டு முதல் அரசுக்கு சொந்தமான இரண்டு உரக் கூட்டுத் தாபனங்களும் தேயிலைக்கான உரத்தை மானிய விலையில் வழங்கத் தொடங்கின. சந்தையில் சுமார் ரூ.14,000 பெறுமதியான மூன்று வகைத் தேயிலை உரங்களை அதாவது 50 கிலோ உறையை ரூ.5500 முதல் ரூ.7500 வரையான விலையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த மானியத்திற்காக இலங்கை தேயிலை சபையின் பணத்தில் இருந்து 1200 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தேயிலை பயிர்ச்செய்கைக்கான உரமிடுதல் மூன்று நிலைகளில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 30,000 மெற்றிக் டொன்கள் தேயிலை உரம் விநியோகிக்கப்படவுள்ளதுடன், ஏற்கனவே 10,000 மெற்றிக் டொன்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
இந்தக் கலந்துரையாடலின் போது, தேயிலை பயிர்ச்செய்கைக்கு உரமிடுவதன் மூலமும், காலியான இடங்களில் தேயிலைக்கன்றுகளை நடுவதன் மூலமும் எதிர்வரும் வருடத்தில் தேயிலை பயிர்ச்செய்கையில் அதிக விளைச்சலை பெற முடியும் என அதிகாரிகள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
இந்த வருடத்தில் தேயிலை ஏற்றுமதி மூலம் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. தற்போது இலங்கையின் தேயிலை 150 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்ற நிலையில் அவற்றில் 20 நாடுகள் எமது தேயிலையை பெருமளவில் கொள்வனவு செய்கின்றன.
இந்தக் கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த கமத்தொழில் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் திரு. மகிந்த அமரவீர, நாட்டில் தேயிலை கைத்தொழில் வளர்ச்சிக்கு தற்போது பயிரிடப்படும் காணிகளின் அளவு போதுமானது எனவும் புதிய நிலம் தேயிலைக்காக பயன்படுத்தப்பட மாட்டாது எனவும் குறிப்பிட்டார்.
மாறாக, தேயிலை தோட்டங்களுக்கு உரமிடுதல், காலியான இடங்களில் செடிகள் நடுதல், அதிக அடர்த்தி விளைச்சல் முறையை அறிமுகப்படுத்துதல் மற்றும் பெறுமதி சேர்ந்த பொருட்களை அதிகரித்தல் ஆகியவற்றின் மூலம் தேயிலை மைய பொருட்களை பெறுமதி சேர்ந்த பொருட்களாக அதிகரிக்க தேயிலை ஆராய்ச்சி நிறுவகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.
தலவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிறுவகம் இதுவரை 70 புதிய தேயிலை வகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தேயிலை ரகங்களுக்கு சர்வதேச ரீதியில் அதிக கேள்வி இருப்பதாகவும் தேயிலை ஆராய்ச்சி நிறுவகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் தேயிலை ஆராய்ச்சி நிறுவகத்தின் அதிகாரிகள் குழுவினரும் மற்றும் கமநல அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் ஏ.எம். எச்.எல் அபேரத்ன உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.