நாட்டில் ஏற்பட்டுள்ள திடீர் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தினால் எமது நாடு உணவுப் பற்றாக்குறைக்கு முகம் கொடுக்க வேண்டிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக கமத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இன்று (04) காலை கமத்தொழில் அமைச்சில் உணவுப் பயிர் உற்பத்தியை அதிகரிப்பதற்கான கருத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடலின் போதே அமைச்சர் இந்த செய்தியை விடுத்தார். கடந்த சில நாட்களாக நிலவி வருகின்ற கடும் வரட்சி காரணமாக சுமார் 70,000 ஏக்கர் நெற்செய்கை அழிந்துள்ளது. மேலும் அறுவடை செய்யவிருந்த நூற்றுக்கணக்கான ஏக்கர் நெற்செய்கையும் தற்போது பல மாகாணங்களில் பெய்து வருகின்ற அடை மழையினால் அழிவடைந்துள்ளது.
மேலும் தாழ்நிலப் பகுதிகளில் மரக்கறி பயிர்கள் மழையினால் நாசமாகியுள்ளன. அம்பாந்தோட்டை மாவட்டத்தில் பயிரிடப்பட்ட சுமார் 15,000 ஏக்கர் வெண்டைக்காய் பயிர்களும் முற்றாக அழிந்துள்ளன. நாட்டின் மொத்த பாசிப்பயறுக்கான தேவையில் 40 சதவீதத்தை இந்த இந்தப் பயிர்களின் மூலம் பெறக்கூடியதாக இருந்தது.
இதன் விளைவாக உணவுத் தட்டுப்பாடு ஏற்படக் கூடிய சாத்தியக்கூறுகள் பற்றி சுட்டிக் காட்டிய அமைச்சர், தோட்டங்களில் மரக்கறிகளை பயிரிடும் வேலைத் திட்டத்தையும், இந்தப் பயிர்ச் செய்கைப் போகத்திற்கு உணவுப் பயிர் வளர்க்கும் திட்டத்தையும் உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு கமத்தொழில் அமைச்சின் செயலாளர் திரு.குணதாச சமரசிங்கவுக்கு ஆலோசனை வழங்கினார்.
அத்துடன், காலநிலை மாற்றங்களினால் ஏற்பட்டுள்ள உணவுப் பயிர் சேதம் தொடர்பான அறிக்கையை விவசாய திணைக்களத்தினால் உடனடியாக வழங்குமாறும் அமைச்சர் தெரிவித்தார்.
அதன்படி தயாரிக்கப்பட்ட உணவுப் பயிர்ச் செய்கைத் திட்டம் விவசாயத் திணைக்களமும், கமநல அபிவிருத்தித் அபிவிருத்தித் திணைக்களமும் இணைந்து நடைமுறைப்படுத்தப்படும். மேலும் பல நிறுவனங்களையும் இதில் பங்குகொள்ளச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.
மழையுடன் கூடிய காலநிலை நிலவுவதுடன் வரட்சியுடன் கூடிய காலநிலையும் அடுத்த பயிர்ச் செய்கைப் போகத்தில் மீண்டும் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் கணித்துள்ளமையினால் இது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் எனவும் அமைச்சர் இந்த கலந்துரையாடலின் போது குறிப்பிட்டார்.
இந்த கலந்துரையாடலில் கால்நடைகள் மற்றும் விவசாய திணைக்களம் அடங்கலாக பல நிறுவனங்களின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.