இந்தப் பெறுபோகத்தில் நெல் கொள்வனவுக்காக நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு பதிலாக மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் ஆகியோரின் ஊடாக 66,000 மெற்றிக் டொன் நெல்லை கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இந்தப் பெரும்போகத்தில் நெல்லைக் கொள்வனவு செய்வதற்கான கமத்தொழில் அமைச்சின் வேலைத் திட்டம் பற்றி நேற்று (02) புத்தளம் விவசாயப் பிரதிநிதிகள் குழுவுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். பெரும்போகத்தில் நெல்லைக் கொள்வனவு செய்யும் நிமித்தம் 10 பில்லியன் ரூபா நிதியை ஒதுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் ஆகியோரின் ஊடாக கொள்வனவு செய்யப்படும் நெல்லை அரிசியாக மாற்றி ஒரு குடும்பத்திற்கு 10 கிலோ அரிசியை 02 மாதங்களுக்கு இலவசமாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பெரும்போகத்தில் நெல்லைக் கொள்வனவு செய்வது தொடர்பில் தானும் நிதி அமைச்சரும் இணைந்து இரண்டு அமைச்சரவை பத்திரங்களை சமர்ப்பித்துள்ளதாகவும், நிதி அமைச்சர் சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்தின் பிரகாரம் அதற்கு அங்கீகாரம் கிடைத்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இதன்படி, இந்த வருடம் அறுவடை செய்யப்படும் நெல்லை, சந்தைப்படுத்தல் சபையின் தலையீட்டின் ஊடாக கொள்வனவு செய்யாமல் மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் ஆகியோரின் ஊடாக கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
Recording - Click here