கௌரவ ஜனாதிபதி திரு ரணில் விக்கிரமசிங்க அவர்கள் சீன அரசாங்கத்திடம் கோரியபடி, இந்த நாட்டில் விவசாயம் மற்றும் மீன்பிடி ஆகிய தொழிலில்களில் ஈடுபட்டு வருகின்ற மக்கள் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிகளைக் கருத்தில் கொண்டு சீன அரசாங்கம் 10.06 மில்லியன் லீற்றர் டீசலை இலவசமாக வழங்கியது.
இதன்படி விவசாய நடவடிக்கைகளுக்காக 6.98 மில்லியன் லீற்றர் டீசல் வழங்கப்பட்டு எஞ்சிய தொகை மீன்பிடி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டது.
எரிபொருள் கையிருப்பு கிடைக்கின்ற நேரத்தில் விவசாயிகள் பயிர்ச் செய்கையை முடித்துள்ளதால் அந்த எரிபொருள் தொகையை அறுவடை காலத்தில் இலவசமாக வழங்குமாறு கமத்தொழில், வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
இந்த மாத இறுதிக்குள் எமது நாட்டின் சில பிரதேசங்களில் நெல் அறுவடை ஆரம்பிக்கப்படவுள்ளதால், நெல் பயிரிடும் விவசாயிகளுக்கு நாளை (09) முதல் இலவசமாக எரிபொருள் விநியோகத்தை ஆரம்பிக்க கமநல அபிவிருத்தி திணைக்களத்தினால் ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எம். எச். எல். அபேரத்ன கூறுகிறார்.
இந்த எரிபொருள் தொகையை ஒவ்வொரு விவசாயிக்கும் ஒன்லைனில் விசேட வவுச்சர் மூலம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதுடன், வவுச்சர் அட்டையின் உத்தியோகபூர்வ வெளியீடு நாளை (09) முற்பகல் 11.00 மணியளவில் கமத்தொழில், வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்களின் தலைமையில் கமத்தொழில் அமைச்சில் இடம்பெறவுள்ளது
இந்த வேலைத் திட்டத்தின் கீழ், அரை ஏக்கர் முதல் 02 ஹெக்டேயர் வரை நெல் பயிரிடும் விவசாயிகளுக்கு இலவசமாக எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு ஹெக்டேயருக்கு 15 லீற்றர் டீசலும், 02 ஹெக்டேயருக்கு 30 லீற்றர் டீசலும் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த பெரும்போகத்தில் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் அரசாங்கம் நடைமுறைப்படுத்திய வேலைத் திட்டத்தின் கீழ் 01 ஹெக்டேயரில் விவசாயம் செய்யும் விவசாயி ஒருவருக்கு மானியமாக ஒன்றரை இலட்சம் ரூபா அரசாங்கத்தினது தலையீட்டின் கீழ் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.