வியட்னாம் தூதுவர் அவர்களுக்கும் மற்றும் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் திரு கே.டீ. லால்காந்த அவர்களுக்கும் இடையில் கமத்தொழில் அமைச்சில் ஒரு சந்திப்பு இடம்பெற்றது.
தூதுவர் அவர்களை வரவேற்ற அமைச்சர், வியட்னாம் மற்றும் இலங்கை ஆகிய இரண்டு நாடுகளும் நீண்டகால அரசியல் உறவைக் கொண்டிருப்பதாகவும், இலங்கையர்களின் இதயங்களில் வியட்னாமும் மற்றும் ஹோ சி மின்ஹ் (Ho Chi Minh) போன்ற தலைவர்களும் எப்போதும் இருப்பதாகவும் குறிப்பிட்டார். வரலாறு முழுவதும், வியட்னாமும் இலங்கையும் நாடுகள் என்ற வகையில் அரசியல் ரீதியில் நல்ல உறவுகளைக் கொண்டிருந்ததாகவும், அன்றிலிருந்து இன்றுவரை இது மாறாத உறவாக இருந்து வருவதாகவும் அமைச்சர் கூறினார்.
தூதுவர் தனது கருத்துக்களைத் தெரிவித்ததோடு, புதிய அரசாங்கத்திற்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதாகவும், வியட்னாமுக்கும் மற்றும் இலங்கைக்கும் இடையிலான தற்போதைய உறவுகளை மேலும் வலுப்படுத்த விரும்புவதாகவும் கூறினார். ஹோ சி மின்ஹ் போன்ற தலைவர்கள் இலங்கையர்களின் இதயங்களில் இருப்பதைப் பற்றி பெருமைப்படுவதாகவும், இலங்கையர்கள் ஹோ சி மின்ஹுக்கு ஒரு சிலையை உருவாக்கியிருப்பதும், இலங்கையர் ஒருவர் அவருக்காக ஒரு பாடலை இயற்றியிருப்பதும் இரு நாடுகளுக்கும் இடையிலான கலாச்சார மற்றும் அரசியல் உறவுகளின் நல்ல பிரதிபலிப்பாகும் எனவும் அவர் கூறினார்.
இன்று வியட்னாம் மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளிலும் விவசாயம் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கின்றது எனவும், இலங்கையின் விவசாயத் துறையை மேம்படுத்துவதற்குத் தேவையான ஆதரவை வழங்கத் தயாராக இருப்பதாகவும் தூதுவர் மேலும் கூறினார். வியட்னாமின் விவசாய வளர்ச்சிக்கு இலங்கையின் ஆதரவு தேவை எனவும் அவர் குறிப்பிட்டார். அதன்படி, இலங்கையில் தேயிலை உற்பத்தி தொடர்பான ஆலோசனை ஆதரவு அவர்களுக்குத் தேவை எனவும் கூறப்பட்டது. வியட்னாமிய ஏற்றுமதி சந்தையை இலக்காகக் கொண்டு பழ உற்பத்திக்கான தொழில் நுட்ப உதவியையும் மற்றும் ஆலோசனையையும் இரு நாடுகளுக்கும் இடையில் பரிமாறிக் கொள்வதற்கும் உடன்பாடு எட்டப்பட்டது.
வியட்னாம் சுமார் 10 ஆண்டுகளாக வெளிநாட்டு சந்தைகளுக்கு பழங்களை ஏற்றுமதி செய்து வருவதால், போட்டி இல்லாமல் பயிர் ஏற்றுமதிக்கு ஒரு நல்ல வெளிநாட்டு சந்தையை உருவாக்க விவசாய பொருட்களின் மேம்பாட்டிற்கான உதவிகளை இரு நாடுகளும் பரிமாறிக் கொள்ள வேண்டும் என்பதற்கும் தூதுவர் இணக்கத்தை தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது மற்றும் அறுவடைக்குப் பிந்தைய தொழில் நுட்ப அறிவைப் பரிமாறிக் கொள்வது பற்றியும் கவனம் செலுத்தப்பட்டது.
இலங்கையின் தேவைகளுக்கு ஏற்ப விவசாயத் துறையில் முதலீடு செய்ய வியட்னாம் தயாராக இருப்பதாகவும், இலங்கையின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பயிர்களுக்கு முன்னுரிமை அளிக்கத் தயாராக இருப்பதாகவும் தூதுவர் மேலும் தெரிவித்தார். இலங்கையில் ஏற்கனவே ஏராளமான வியட்னாமிய மக்கள் வசித்து வருவதாகவும், சில பகுதிகளில் இலங்கைக்குத் தேவையான உதவிகளை வழங்க அவர்கள் தயாராக இருப்பதாகவும் தூதுவர் தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வளர்க்க, சுற்றுலாத் துறையை மேம்படுத்துவது, நேரடியாக விமானங்களை இயக்குவது, விவசாயத் துறைக்குத் தேவையான உரங்களை விநியோகிப்பது, விவசாய தொழில் நுட்பத்தைப் பரிமாறிக் கொள்வது என்பன போன்ற விடயங்கள் பற்றி விரிவான கலந்துரையாடல்களை எதிர்காலத்தில் நடத்துவது அவசியம் என கூறிய அமைச்சர், தனது அமைச்சை பார்வையிட்டதற்காக தூதுவருக்கு விஷேட நன்றியை தெரிவித்தார்.