பனை மைய தொழிலில் ஈடுபட்டுள்ள ஏற்றுமதியாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று (15) காலை இலங்கை மன்றத்தில் நடைபெற்றது. விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில்கள் அமைச்சர் திரு.மகிந்த அமரவீர அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வெளிநாட்டு தூதுவர்கள், உயர் அதிகாரிகள், பனை மைய பொருட்களை ஏற்மதி செய்யும் ஏற்றுமதியாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
பனம் கள்ளு என்ற புதிய ஒரு தயாரிப்பு சர்வதேச சந்தையில் புதிய ஒரு பொதியில் அறிமுகப்படுத்தப்பட்டது. பனையை அடிப்படையாகக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் சில உணவுப் பொருட்களும் மற்றும் அழகு சாதனப் பொருட்களும் அறிமுகப்படுத்தப்பட்டன.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில்கள் அமைச்சர் மகிந்த அமரவீர அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்கள். எமது நாட்டில் 11 மில்லியன் பனை மரங்கள் உள்ளன. ஆனால் 40% மட்டுமே பயன்படுத்தப்படுகின்றது. எஞ்சிய 60 சதவீத பனை மரங்கள் இன்னும் முறையாக பயன்படுத்தப்படவில்லை.
புதிய ஒரு பொதியில் புதிய ஒரு பொருளாக அறிமுகம் செய்யப்படும் பனை ஓலைகளுக்கு இன்று பல நாடுகளில் கிராக்கி அதிகமாக உள்ளது. பல நாடுகள், குறிப்பாக கனடா மற்றும் பிரான்ஸ் இந்த பொருட்களை வாங்க முன்வந்துள்ளன. இந்தத் தொழிலை ஊக்குவிப்பதன் மூலம் அதிக வருமானம் ஈட்ட முடியும் என்றாலும், பனை சார்ந்த பொருட்கள் இதுவரை ஒரு தொழிலாக உருவாகாதது ஒரு பிரச்சினையாக காணப்படுகின்றது.
எனவே, இந்த நாட்டில் பனை கைத்தொழிலுக்கு ஏனைய பெருந்தோட்டப் பயிர்களுக்கு மத்தியில் முன்னுரிமை வழங்கும் வகையில் செயற்படுத்தப்படும். இந்த வருடத்தின் கடந்த 10 மாதங்களில் 78 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
எனவே, பனை மைய பொருட்களை ஊக்குவிப்பதன் மூலம் அதிக வருமானம் ஈட்ட முடியும். ஆகையால் இந்தத் தொழிலை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் என்ற வகையில் எம்மால் வழங்கக்கூடிய அனைத்து ஆதரவையும் வழங்குவோம் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் பனை அபிவிருத்தி சபையின் தலைவர் கலாநிதி கிருஷாந்த பதிராஜ அடங்கலாக பலரும் கலந்துகொண்டனர்.