2022/23 பெரும்போகத்தில் நெற் செய்கைக்கு தேவையான 13,000 மெற்றிக் டொன் யூரியா உரங்களை எடுத்து வருகின்ற முதலாவது கப்பல் கடந்த நாட்களில் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இந்த யூரியா உரம் சீனாவில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த உரத்தை இறக்கும் பணி இன்று (28) ஆரம்பமானது.
கமத்தொழில், வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர் மொஹான் டி சில்வா மற்றும் அமைச்சின் செயலாளர் திரு.ரோஹன புஸ்பகுமார ஆகியோர் இன்று (28) காலை குறித்த விடயத்தை அவதானிப்பதற்கான விஜயத்தில் கலந்து கொண்டனர்.
இந்த பெரும்போகத்திற்கு தேவையான யூரியா உரத்தை கொள்வனவு செய்வதற்கு 105 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்க உலக வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தக் கடனின் கீழ், எமது இந்தப் பெரும்போகத்தில் நெல் மற்றும் சோளம் ஆகிய பயிர்களை பயிரிடுவதற்கு தேவையான யூரியா உரத்தை முழுமையாகப் பெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், கொள்முதல் நடவடிக்கைகளின் வெளிப்படைத் தன்மையை அவதானிக்க உலக வங்கியின் பிரதிநிதிகள் வழக்கமான கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளித்தனர். எனவே, யூரியா உரக் கொள்வனவில் முறைகேடு ஏற்படாத வகையில் அவதானித்துக் கொள்ள முடிந்தது.
இந்த முதலாவது யூரியா உரத்தை மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் உள்ள கமநல சேவை நிலையங்களுக்கு வழங்குவதன் மூலம் நெற்செய்கைக்கான முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட உரங்களுக்கான முழுத் தேவையையும் ஒரே தடவையில் பெற்றுக்கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நாடு முழுவதிலும் பருகால நெற் செய்கை இன்னும் ஆரம்பிக்கப்படாவிட்டாலும், நெல்லை விதைத்து 14 நாட்களுக்குள் யூரியா உரத்தை முதன்முறையாக இடுவதற்கு தேவையான அளவு யூரியா உரத்தை நாடளாவிய ரீதியில் அனைத்து கமநல சேவை நிலையங்களுக்கும் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பெரும்போக பயிர்ச் செய்கைக்கு தேவையான யூரியா உரத்தை கொள்வனவு செய்வதற்கு கோரப்பட்ட இரண்டாவது கேள்வி மனுவின் பிரகாரம், 120,000 மெற்றிக் டொன் உரத்தை ஏற்றி வரும் இரண்டாவது கப்பல் நவம்பர் மாதம் இறுதி வாரத்தில் இலங்கையை வந்தடைய உள்ளது.
இங்கு கருத்து தெரிவித்த அமைச்சர்:-
யூரியா உரத்தை கொள்வனவு செய்வதற்கு 105 மில்லியன் டொலர் நிதியை வழங்கிய உலக வங்கிக்கு அரசு சார்பில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், உரங்கள் கொள்வனவு நடவடிக்கையை தொடர்ந்து கண்காணித்து அதன் ளிப்படைத் தன்மையை கண்காணிக்க உலக வங்கி எமக்கு தொடர்ந்து ஆதரவளித்தது.
இன்று மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களுக்கு தேவையான 7500 மெற்றிக் டொன் அளவான முழு உரத்தையும் வழங்கி வருகின்றோம். மேலும், தேவையான யூரியா உரத்தை பிற மாவட்டங்களுக்கும் ஏற்கனவே விநியோகித்துள்ளோம். மேலும், அடுத்த மாதம் கடைசி வாரத்துக்குள் விவசாயிகளுக்கு தேவையான யூரியா உரம் மற்றும் கதிர் உரம் ஆகிய இருவகை உரங்களையும் முழுமையாக வழங்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு சிறுபோகத்தில் கொடுக்கப்பட்ட யூரியா உர உறைகள் தேவையான எடையில் இல்லை என சிலர் குற்றம் சாட்டினர். அதனால்தான் இன்று ஊடகங்கள் முன் எடையை அளவிட்டேன். நாம் மேலெழுந்த வாரியாக சோதனை செய்த ஒவ்வொரு உர உறையிலும் 50 கிலோ கிராம் யூரியா உரம் இருந்தது.
விவசாயிகளின் பிரதிநிதிகள் என்று கூறிக்கொள்ளும் சிலர் விவசாயிகளை முடக்க முயற்சிக்கின்றனர். அரசாங்கம் என்ற வகையில், எதிர்காலத்தில் விவசாயிகளுக்கு மேலும் நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்துள்ளோம். உலக சந்தையில் யூரியா உரத்தின் விலை அதிகரித்துள்ள போதிலும் இம்முறையும் ஒரு உறை உரத்தை 10,000 ரூபாவிற்கு வழங்குகின்றோம்.
எனவே இம்முறை பெரும்போகப் பயிர்ச் செய்கையின் போது அச்சமின்றி பயிரிடுமாறு விவசாயிகளை அரசாங்கம் என்ற வகையில் கேட்டுக்கொள்கின்றோம் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.